Skip to main content

கோரிக்கைகளோடு பிரதமர் அலுவலகத்தை நாடிய எலான் மஸ்க்கின் டெஸ்லா!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

pm modi -elon musk

 

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது மின்சார வாகனங்களை விற்பனை செய்ய விரும்புகிறது. இந்த வருடத்திற்குள் இந்தியாவில் விற்பனையை தொடங்க நினைக்கும் அந்தநிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக உள்ளதென்று கருதுவதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு தலைவர் மனுஜ் குரானா உள்ளிட்ட டெஸ்லா நிறுவன அதிகாரிகள், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க கோரி பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியாவின் வரி விகித கட்டமைப்பு, இங்கு தங்களது வணிகத்தை லாபகரமானதாக ஆக்காது என டெஸ்லா அதிகாரிகள் தெரிவித்ததாகவும், எலான் மஸ்க் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இருப்பினும் இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில் குறித்து சரியான தகவல் இல்லை. இந்தியாவில் 40 ஆயிரம் டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான மின்சார வாகனங்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரியும், 40 ஆயிரம் டாலர்களுக்கு மேலான மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.