இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி (11.03.2024) நடைபெற்ற விசாரணையில், மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வெளியிடவும், அதனை மார்ச் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) வழங்கியது. இதனையடுத்து தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தேர்தல் பத்திரங்களை நிறுவனங்கள், தனி நபர்கள் வாங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம்பெற்றிருந்தன. அதாவது 337 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கி இருந்தன.
அதே சமயம் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (15.03.2024) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை www.eci.gov.in/candidate&politicalparty என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் எந்த கட்சிகளுக்கு எந்தெந்த நிறுவனங்கள் சார்பில் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கே சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மொத்தமாக ரூ.16 ஆயிரத்து 518 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ. 8 ஆயிரத்து 250 கோடி பாஜகவுக்கு மட்டும் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோன்று காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடியை பெற்றுள்ளது. தி.மு.க. ரூ. 656.5 கோடி பெற்றுள்ளது. அதில் ரூ. 509 கோடியை மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் தந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ. 442 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ. 944 கோடியும், தெலுங்கு தேசம் ரூ. 181 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. அ.தி.மு.க. சார்பில் பெற்ற ரூ. 6 கோடியில் ரூ.4 கோடிக்கும் மேல் சி.எஸ்.கே. அணி நிர்வாகம் வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. அப்போது அ.தி.மு.க பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இது குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.