Skip to main content

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதிக்க நிபுணர் குழு எதிர்ப்பு - காரணம் என்ன? 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

serum institute of india

 

அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவாவாக்ஸ் என்ற பெயரில் தயாரித்துவருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தக் கோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெற சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

இந்தநிலையில், சமீபத்தில் கோவாவாக்ஸ் தடுப்பூசியை, 2 முதல் 17 வயத்திற்குட்பட்டோர் மீது பரிசோதனை செய்ய சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த சூழலில், கோவாவாக்ஸை 2 - 17 வயதானோர் மீது பரிசோதிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சீரம் நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து ஆலோசித்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, "கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மூல பதிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசி இதுவரை எந்த நாட்டிலும் அனுமதி பெறவில்லை என்பதால், குழந்தைகள் மீது கோவாவாக்ஸ் தடுப்பூசியைப் பரிசோதிக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்க, தற்போது கோவாவாக்ஸ் தடுப்பூசியைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் மேல் செய்யப்படும் சோதனையின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவை சீரம் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்" என கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

சிறார்களுக்கு செலுத்த மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corbevax

 

இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15-18 வயதுடைய சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

இந்தச்சூழலில், பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த அனுமதி வழங்குமாறு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு, அவரது நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

 

இந்தநிலையில் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டதும், ஏற்கனவே இத்தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்துவது குறித்த சோதனைக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் 15-18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அவ்வயதினருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 12 வயதுடையோருக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.