Skip to main content

''உதவி கேட்க தயங்க வேண்டாம்''; இமாச்சலத்திற்கு 10 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்   

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

''Don't hesitate to ask for help; Chief Minister of Tamil Nadu announced Rs 10 crore relief for Himachal

 

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதிஉதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

சில நாட்களாகவே வரலாறு காணாத பலத்த மழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு என பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக நிகழ்ந்த நிலச்சரிவு, பலத்த மழை, வெள்ளம் ஆகிய காரணங்களால் ஏராளமான பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொதுச் சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் அழிந்துள்ளன.

 

இடைவிடாத மழை, மேக வெடிப்பு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளது, மறுபுறம் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ள அம்மாநில அரசு, மழை வெள்ள பாதிப்புகளால் பயிர்களும், விவசாய நிலங்களும் அழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளில் ராணுவம், விமானப்படை, தேசிய மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படையினர், தன்னார்வல தொண்டு நிறுவனத்தினர் என கூட்டு முயற்சியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு பகலாக மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வரலாறு காணாத பேரழிவு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தை தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ள மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

''Don't hesitate to ask for help; Chief Minister of Tamil Nadu announced Rs 10 crore relief for Himachal

 

இந்நிலையில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதி உதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக  இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கை போனில் தொடர்பு கொண்டு பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த முதல்வர், 'இமாச்சலத்தில் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மிகவும் நெருக்கடியான நிலையில் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலத்திற்கு உதவ தமிழ்நாடு அரசும், மக்களும் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளோம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்'' என தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாயை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.