அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. இந்த பெண்களை போலீசார் கைது செய்யும்போது நீலம் என்ற பெண் செய்தியாளர்களைச் சந்தித்து, “என்னுடைய பெயர் நீலம். மத்திய அரசு எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். காவல்துறை தடியடியையும் நிறுத்த வேண்டும். எங்களை துன்புறுத்துகிறார்கள், சிறையில் அடைக்கிறார்கள். இதை அவர்கள் நிறுத்த வேண்டும்.
நான் எந்த அமைப்பையும் சார்ந்தவர் இல்லை. நான் இந்திய மாணவர். எங்களையும், சிறு வியாபாரிகளையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் நசுக்குகிறார்கள். இதை எதிர்த்துதான் நாங்கள் இதை செய்கிறோம். எங்கள் குரலை யாரும் கேட்பதில்லை. அடக்குமுறையையும், வன்முறையையும் நிறுத்துங்கள்” என்று கூறியவர்களை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, நீலம் என்பவரின் தாய் ஹரியானாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நீலம் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி மிகவும் கவலைப்பட்டார். நான் அவருடன் எப்போதும் பேசுவேன். ஆனால், அவர் டெல்லி விஷயத்தைப் பற்றி ஒருமுறை கூட சொல்லவில்லை. அவளுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைக்காததால் சாவதே மேல் என்று அவ்வப்போது என்னிடம் கூறுவாள்” என்று கூறினார்.