டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, பாகிஸ்தானின் பஞ்சாபில் வசிக்கும் முகமது அஸ்ரஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்திய குடிமகன் என்ற போலி அடையாள அட்டையுடன் டெல்லியில் இருந்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பயங்கரவாதியிடமிருந்து ஒரு ஏகே - 47 துப்பாக்கி, 2 அதிநவீன துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், ஒரு கையெறி குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பயங்கரவாதி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், வெடிபொருட்கள் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழும், மேலும் சில சட்டங்களின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.