சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, கடந்த 20ஆம் தேதி ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார். அவரோடு சேர்த்து, 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் தடை விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டெல்லி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங், “15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை அடையாளம் காணவும், எரிபொருள் விற்கப்படாமல் இருக்கவும் பெட்ரோல் பங்க்-குகளில் சிறப்பு கருவிகள் பொறுத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள கிட்டத்தட்ட 80 சதவீத பெட்ரோல் பங்க்-குகளில் இந்த கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்து பங்க்-குகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும். .
ஏப்ரல் 1 முதல், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். டெல்லி அரசு, பெட்ரோலிய அமைச்சகம் மூலம், அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் தடை குறித்து ஒரு ஆலோசனையை அனுப்பி வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களைக் கண்டறிந்து, அவை நகரத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவையும் அமைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்குள் நுழையும் டீசல் வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.