மாதம்தோறும் மக்களுக்கு 15 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், "கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நாங்கள் வழங்கிய வாக்குறுதியின்படி டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இணையதள வசதி இலவசமாக வழங்கப்படும். இதற்காக டெல்லி முழுவதும் பொருத்தப்பட்ட 11,000 வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மூலமாக மக்கள் இலவசமாக இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு டெல்லி இளைஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.