Skip to main content

இந்திய - சீன எல்லையில் தற்போதைய நிலை: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

rajnath singh

 

இந்தியா - சீனா இடையே கடந்த வருடம் எல்லைப் பிரச்சனை காரணமாக மோதல் வெடித்தது. இதில், 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 45 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன.

 

இந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையே நடந்த ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட முடிவின்படி, இருநாடுகளும் எல்லையில் படைக்குறைப்பை தொடங்கியுள்ளதென்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சீன ஊடகம் நேற்று (10.02.2021) செய்தி வெளியிட்டது.

 

இந்நிலையில் லடாக் எல்லையில் தற்போதுள்ள நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டருகே, படைகளை விலக்குவதில் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ராஜ்நாத் சிங், "கட்டுப்பாட்டு கோட்டில் அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இருதரப்பு உறவுகளைப் பேணுவதை இந்தியா எப்போதும் வலியுறுத்துகிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன. 

 

சீனாவுடனான நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் படைக்குறைப்பு செய்வதற்கான உடன்படிக்கைக்கு வழிவகுத்தன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா ஒருங்கிணைந்த முறையில் அங்கு படைகளைக் குறைக்கும்.

 

லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகிலும், அதனைச் சுற்றியுள்ள அவர்களின் பகுதியிலும் சீனா பெரிய அளவிலான படைகளையும், ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் சேகரித்து வைத்தது. நமது படைகளும் போதுமான அளவிற்கு திறம்பட படைகளைக் குவித்தது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டருகே படைகளைக் குறைப்பது தொடர்பான சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை, முழுமையான படைக்குறைப்பு விரைவாக செய்யப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

 

இரு தரப்பும் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு உடன்பட வேண்டும். அதை மதிக்க வேண்டும். இரண்டாவதாக, எந்தவொரு கட்சியினாலும் ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சிக்கக்கூடாது. மூன்றாவதாக, அனைத்து சமரசங்களும் இரு தரப்பாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின்போது இந்தியா சீனாவிடம் தெரிவித்தது.

 

சீனா தனது படைகளை பங்கோங் ஏரியின் வடக்குக் கரையில், ஃபிங்கர் 8 க்கு கிழக்கே வைத்திருக்கும். இந்தியா தனது படைகளை ஃபிங்கர் 3 க்கு அருகிலுள்ள நிரந்தர தளத்தில் வைத்திருக்கும். மேலும் இருநாடுகளும் ஏரியின் வடக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதைத் தாற்காலிகமாக ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. பாங்கோங் ஏரி பகுதியில் முழுமையான படைக்குறைப்பு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மூத்த தளபதிகளின் அடுத்தக் கூட்டத்தைக் கூட்டவும், மீதமுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“காங்கிரஸ் டைனோசரை போன்று இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும்” - ராஜ்நாத் சிங்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress will be extinct like a dinosaur in a few years says Rajnath Singh
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காக்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளை சேர்த்து பாஜக என்.டி.ஏ கூட்டணியையும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியையும் அமைத்து வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என்று சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், டைனோசர் போன்று காங்கிரஸ் கட்சியும் இன்னும் சில காலங்களில் அழிந்துவிடும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தராகாண்டில் கவுச்சார் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டைபோட்டு கொள்கின்றனர். டைனோசர் போன்று இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற பெயரை கூறினால், குழந்தைகள் யார் அவர்கள்? என்று கேட்பார்கள் எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.