Skip to main content

அதானிக்கு இறங்கு முகம்; மூன்றாவது நாளாக வீழ்ச்சி

 

 decreace to Adani; falls for third day

 

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த சில வருடங்களாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகே அதானியின் சொத்து மதிப்பு மிகப்பெருமளவில் உயர்ந்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். கடந்த சில நாட்களாக அதானி குழுமம் பங்கு சரிந்துள்ளதால் சிறிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.

 

இந்தநிலையில் தான் புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடிகளைச் செய்துள்ளதாகவும், அக்குழுமத்திற்கு பெருமளவில் கடன் உள்ளதாகவும் கூறி 106 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.  இந்த அறிக்கை வெளியான நொடியிலிருந்து அதானி குழுமத்தின் பங்கு பெருமளவில் சரிந்துள்ளது. ஆய்வறிக்கை வெளியான ஜனவரி 25 ஆம் தேதி மட்டும் அதானி குழுமம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது. இதனையடுத்து தீங்கு இழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆதாரமற்றது என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம் எனத் தெரிவித்தது.

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்த ஆவணங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது எனக் கூறியுள்ளது. இந்தப் புகார்களுக்கு மத்தியில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மூன்றாவது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளன. அதானி  டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி வில்மர் உள்ளிட்ட பங்குகளின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !