Skip to main content

90 சதவீதம் செயல்திறன் கொண்ட புதிய தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

moderna vaccine

 

இந்தியாவில் கோவிஷீல்ட் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளைத் தவிர ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் v தடுப்பூசியும் இந்தியாவில் செலுத்தப்பட்டு வந்தாலும், அது இன்னும் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வரவில்லை.

 

இந்நிலையில் இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர், அமெரிக்கத் தடுப்பூசியான மாடர்னாவை இறக்குமதி செய்து, இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சிப்லா மருந்து நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு, உள்நாட்டில் சோதனை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதேநேரத்தில் அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழு அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்பு, அத்தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட முதல் நூறு பேரின் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தரவை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. 

 

இதன் அடிப்படையிலேயே அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். மாடர்னா தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டது ஆகும். மாடர்னா தடுப்பூசியைத் தொடர்ந்து விரைவில் ஃபைசர் தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

சிறார்களுக்கு செலுத்த மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corbevax

 

இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15-18 வயதுடைய சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

இந்தச்சூழலில், பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த அனுமதி வழங்குமாறு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு, அவரது நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

 

இந்தநிலையில் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டதும், ஏற்கனவே இத்தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்துவது குறித்த சோதனைக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் 15-18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அவ்வயதினருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 12 வயதுடையோருக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.