ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி!

11:01 PM Jul 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"அகில இந்திய அளவில் கரோனா இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட மாநிலத்தில் இறப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், கரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்லவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று (29.07.2020) மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் இரவு நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், உடற்பயிற்சி கூடங்களைத் திறக்கவும், திரையரங்குகள், கலையரங்குகள், ஓட்டல்களில் உள்ள பார்களை மூடவும் உத்தரவிட்டுள்ளனர். அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக்களை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் கரோனா பாதிப்பு 6 ஆயிரம் வரை உயரும் என்றும், மிகப்பெரிய அளவில் பாதிப்பவர்கள் 2,600 பேர் வரை இருக்கும் என்றும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆகவே அதற்கு சுகாதாரத்துறை ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவையான உபகரணங்கள், மருந்துகள் வாங்கவும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், ஏ.எம்.என்.கள், சுகாதாரத்துறை பணியாளர்களை நியமிக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய புதுச்சேரி மருத்துவத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


காலியிடங்களில் பணியாளர்கள் வெகு விரைவில் பணியமர்த்தப்படுவர். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவினால் அதனைத் தடுத்து நிறுத்த மருத்துவத்துறை மட்டுமின்றி மற்ற துறைகளும் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசின் சார்பில் செய்து கொண்டிருக்கிறோம்.

தேவையான உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு அவைகள் வாங்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகள் வாங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பில் இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. மத்திய அரசில் இருந்து வெண்டிலேட்டர்கள், முழு கவச உடைகள் வந்துள்ளன. ஆனால் மற்ற உபகரணங்கள் கொடுக்க காலதாமதமாகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். அந்த நிதியுதவி கிடைக்கவில்லை. குறித்த காலத்தில் கிடைத்தால்தான் தேவையான உபகரணங்களை வாங்கவும், மருத்துவர்களை நியமிப்பதற்கான வேலையையும் செய்ய முடியும். இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். முதல்வரின் கரோனா நிவாரண நிதியலிருந்து ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 கோடி 20 லட்சம் ஒதுக்கி அந்தக் கருவிகள் வாங்கப்படுகின்றன.


இப்படி மாநில அரசின் நிதி மற்றும் முதல்வரின் கரோனா நிவாரண நிதிகளில் இருந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதல் கட்டமாக ரூ.225 கோடியையும், மொத்தமாக புதுச்சேரி மாநிலத்தைக் கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற தேவைப்படும் நிதி ரூ.975 கோடியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு அது சம்மந்தமான எந்தவிதமான பதிலையும் மாநில அரசுக்கு இதுவரை கொடுக்கவில்லை.


இந்தச் சூழ்நிலையில் ஒருபுறம் மத்திய அரசின் விதிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொருபுறம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தச் சோதனையான காலக்கட்டத்தில் புதுச்சேரி மாநில மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற முறையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு, பக்கத்து மாநிலமான தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதையும் கருத்தில் கொண்டு, நம்முடைய மாநில அரசின் சார்பில் நாம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நாளை அறிவிப்பை வெளியிடுவோம்.


புதுச்சேரி மாநில மக்களின் உயிர் முக்கியம். அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. நிதி ஆதாரத்தை ஒருபுறம் பெருக்க வேண்டும். மற்றொரு புறம் மக்களுக்கு மாநில அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நாளை அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிப்போம். கரோனாவுக்கு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. பக்கத்து மாநிலமான தமிழகத்தில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. நம்முடைய மாநிலத்தில் அதனைக் கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கரோனா பாதித்தவர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற முடிவை இப்போது எடுத்துள்ளோம். யார் வீட்டில் கரோனா உள்ளதோ அவர்களின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்.

இதனால் மக்களின் சகஜ வாழ்கை பாதிக்காது. இதையெல்லாம் புதுச்சேரி மாநில மக்கள் உணர்ந்துகொண்டு முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை உறுதியோடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கரோனாவை புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாகக் குறைக்க முடியும்’’ என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT