Skip to main content

ஆறு மாதங்களில் எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய நோயாக கரோனா மாறும் - தேசிய நோய் கட்டுப்பாடு மைய இயக்குநர்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

CORONA

 

இந்தியாவில் கரோனா பரவல் தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துவருகின்றனர். இந்தநிலையில், தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் இயக்குநர் (NCDC) சுஜித் சிங், ஆறு மாதங்களுக்குப் பிறகு கரோனா பரவலை எளிதாக கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இந்த தொற்றுநோய் எங்களது பெரும்பாலான கணிப்புகளைப் பொய்யாக்கியுள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் நாம் எண்டமிக் நிலையை அடைவோம். கரோனா எண்டமிக்காக மாறினால், தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்தலாம். சுகாதார உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் குறையும். இறப்பு மற்றும் நோயற்ற தன்மை கட்டுப்பாட்டில் இருந்தால், நாம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் சுஜித் சிங், "தடுப்பூசி, கரோனா வைரஸுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்துவருகிறது. தற்போது 75 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்றால், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் 30 - 31% நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அப்படியெனில் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக்கொண்ட 30 கோடி மக்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரை 13,405 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 16 ஆயிரத்து 51 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

காலை 8 மணிவரையிலான கடைசி 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 235 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 34 ஆயிரத்து 226 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி கரோனா உறுதியாகும் சதவீதம் 1.24 ஆக இருந்து வருகிறது.

 

 

Next Story

இந்தியாவில் அதிகம் பரவும்  ஒமிக்ரானின் துணை மாறுபாடு!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து விளக்கமளித்தார்.

 

செய்தியாளர் சந்திப்பில் லாவ் அகர்வால் கூறியதாவது; நாட்டில் இதுவரை 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 74 சதவீதம் பேருக்கு  இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. 97.03 லட்சம் தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாட்டில் கரோனா உறுதியாகும் சதவீதம் கிட்டத்தட்ட 17.75 சதவீதமாக இருந்தது. 11 மாநிலங்களில் 50,000 மேற்பட்டவர்கள் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 14 மாநிலங்களில் 10,000 ஆயிரத்திலிருந்து 50,000 நபர்கள் வரையும், 11 மாநிலங்களில் பத்தாயிரத்திற்கும் குறைவானவர்களும் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

 

கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோரும், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சம்பந்தமாக நாங்கள் மாநிலங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஜனவரி 26 நிலவரப்படி, 551 மாவட்டங்களில், கரோனா உறுதியாகும் சதவீதம் 5-க்கும் மேல் இருக்கிறது.

 

கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் தேதி, கரோனாவின் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்தபோது, ஒரேநாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கரோனா உறுதியானது. 3679 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 3% பேருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. 21 ஜனவரி 2022 அன்று, 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதியானது. 435 இறப்புகள் பதிவானது. 75 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர், நாட்டில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 இப்போது இந்தியாவில் அதிகம் பரவி வருவதாகக் கூறியுள்ளார்.