court orders central to respond on eia 2020 case

Advertisment

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் 17 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் EIA 2020 வரைவு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வரைவுக்குத் தடைகோரி டெல்லி மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

கடந்த ஜூன் 30ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், அடுத்த 10 நாட்களுக்குள் 22 இந்திய மொழிகளில் இந்த அறிவிக்கையை மொழிபெயர்க்க வேண்டும் என்றும், வரைவு மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு மொழிபெயர்ப்பும் செய்யாமல், நீதிமன்றத்திடம் அதற்கான கால அவகாசமும் கேட்காமல் மௌனம் சாதித்து வந்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது தொடர்பாக வருகின்ற 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.