Counterfeit note circulating in lakhs; Four arrested, including ruling party official

Advertisment

புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால்(24), பெயிண்டர். இவரது நண்பர் மனோஜ்(29). இருவரும் புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள மதுபானக் கடையில், 500 ரூபாய் கொடுத்து மதுபானம் வாங்கினர். அது கள்ள நோட்டு என்பதை அறிந்த கடை மேலாளர் பிரபாகரன், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் ஆட்டோ ஓட்டுநர் ஷரண்(27) என்பவர் மூலம் கள்ள நோட்டு வாங்கியது தெரிந்தது. ஷரணை கைது செய்து விசாரித்ததில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன் கமல்(31) என்பவரிடம் இருந்து கள்ள நோட்டு வாங்கி புழக்கத்தில் விட்டதை கண்டுபிடித்தனர். மேலும் காவல்துறை விசாரணையில், மோகன் கமல் சென்னையில் ஒரு கும்பலிடம் 10 ஆயிரம் ரூபாய் நல்ல ரூபாய் நோட்டுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகள் என்ற விகிதத்தில், 4 லட்சம் வரை கள்ள நோட்டு வாங்கியுள்ளார் என்றும், இந்த பணத்தை 20 ஆயிரத்திற்கு 50 ஆயிரம் வீதம் புதுச்சேரியில் புழக்கத்தில் விட்டுள்ளார் என்றும் தெரியவந்தது. அதையடுத்து நால்வரையும் கைது செய்து 2.42 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சென்னை கும்பலை கைது செய்ய, தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.