கரோனா தாக்குதலால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் இந்த வைரஸ் தோற்று இன்னும் கண்டறியப்படவில்லை எனினும், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்த வைரஸ் தோற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து இந்திய கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் கரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 24 மணிநேர உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. + 91-11-23978046 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு கரோனா வைரஸ் குறித்த தங்களது சந்தேகங்கள் மற்றும ஐயங்களை பொதுமக்கள் கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.