Skip to main content

தடுப்பூசிக்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உண்டா? - நிதி ஆயோக் விளக்கம்!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

dr vk paul

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தவகையில், மாடர்னா தடுப்பூசிக்கு இன்று இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், கரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

மாடர்னா தடுப்பூசி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் வி.கே. பால், இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் சர்வதேச தடுப்பூசியான மாடர்னா, இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும் எனத் தெரிவித்தார். கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா ஆகிய நான்கு தடுப்பூசிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானது எனக்  கூறிய டாக்டர் வி.கே. பால், தடுப்பூசிக்கும் மலட்டுத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர், ஃபைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் கூறினார். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர் வி.கே. பால், "கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி பாதுகாப்பானது. அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் மேலும் ஆய்வு செய்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.