Skip to main content

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு கரோனா! மரத்தடியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
 Corona for Puducherry NR Congress MLA! Legislative meeting held under a tree!

 

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் கூட்டம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நேற்று சட்டப்பேரவை அரங்கில் நடந்தது. வழக்கமாக இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர் நேற்றுதான் முழுமையாக பங்கேற்றனர். அதில் பங்கேற்ற எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது தெரிய வந்தது. அவர் தற்போது ஜிப்மரில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் அரங்கு முதல்முறையாக மூடப்பட்டது. இரு நாட்களுக்கு அந்த அரங்கு மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதையடுத்து சட்டபேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடத்தப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டு சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவையை தொடங்கி வைத்தார். பேரவை தொடங்கிய உடன் சபாநாயகர் சிவக்கொழுந்து மரத்தடியில் சட்டப்பேரவை நடைபெறுவதால் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் முன்மொழிய, தொடர்ந்து விவாதம் நடைபெற்று  பட்ஜெட்க்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

 Corona for Puducherry NR Congress MLA! Legislative meeting held under a tree!


முன்னதாக அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காததால் சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் பரவி உள்ளது என்றுகூறி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  புதுச்சேரியில் மதுபான விற்பனைக் கொள்கையில் அரசுக்கு வருமானம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது பேச வாய்ப்பு அளிக்காததால் மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

 

அதனைத் தொடர்ந்து நிறைவுரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, "சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 7 நாட்களுக்கு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். வரும்  திங்கட்கிழமை சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை என நடத்தப்படும்" என தெரிவித்தார். புதுச்சேரியில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.