
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். ஊரடங்கு, தடுப்பூசி என பல்வேறு இன்னல்களை கொடுத்து சென்றது கொரோனா.
இந்நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்து 5,364 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 221 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர்.