Skip to main content

73 பவுன் நகையை திருடி மோசடி செய்த கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Cooperative society manager who stole 73 pounds of jewelry and cheated

 

புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். 

 

இதனிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சங்க தலைவர் எம்பெருமாள் கடந்த 16ஆம் தேதி தணிக்கையாளர் இந்திரமோகனுடன் சங்க நிர்வாக பொறுப்பாளரும், முதுநிலை எழுத்தருமான பாப்பான்சாவடியை சேர்ந்த கதிரவன்(48) என்பவரிடம் சங்க கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யக் கூறினர்.

 

இதற்கு கதிரவன் சரியான பதில் அளிக்காததுடன் மறுநாள் 17ஆம் தேதி பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த எம்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து சங்க கணக்குகளை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் தலைமையில் தணிக்கையாளர்கள் இந்திராமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ் குமார் அடங்கிய குழுவினர் சங்க பொறுப்பாளர் கதிரவனை சந்தித்து ஆய்வுக்கு அழைத்தனர். ஆனால் கதிரவன் ஆய்வுக்கு வர மறுத்து, நகை பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை மட்டும் கொடுத்து அனுப்பினார்.

 

துணைப் பதிவாளர் முன்னிலையில் நகை பெட்டகம் திறந்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது நகை கடன் கணக்குகளில் 198 கணக்குகள் மட்டுமே இருந்தன. அதிலும் 18 நகை கணக்கில் நகைகள் இல்லாமல் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்த ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 588.50 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சங்க நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் மீது சங்க தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து கதிரவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கதிரவன் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வேறு இடங்களில் அடமானம் வைத்து செலவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் நகைகளை அடமானம் வைக்க கதிரவனுக்கு உதவியவர்களை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி பிறந்தநாள் வேலையின்மை தினம்” - புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ்  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Prime Minister Modi Birthday Unemployment Day” - Puducherry Youth Congress

 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைப்பிடித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்.17ம் தேதி) பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு திரண்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார், கோஷங்களை எழுப்பினர். மேலும், டீ, பக்கோடா, சமோசா ஆகியவற்றை விற்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க. அரசு ஜி20 மாநாட்டுக்கு ரூ. 4000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்ட ரூ. 20,000 கோடி என செலவு செய்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல்; தனது நண்பர் அதானிக்கு சலுகை வழங்குகிறது” என்று பேசினார். 

 

 

Next Story

சேலம் மண்டலத்தில் 325 கூட்டுறவு சங்கங்களுக்கு செயல் ஆட்சியர்கள் நியமனம்!

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Executive Collectors appointed for 325 cooperative societies in Salem

 

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை பதிவாளர், இதர 15 செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் 23,149 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 

 

சேலம் மண்டலத்தில் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் 360 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு தேர்வான நிர்வாகக்குழுவின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது 325 கூட்டுறவு சங்கங்களுக்கு புதிதாக செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

முதல்கட்டமாக 78 சங்கங்களின் பதவிக்காலம் கடந்த ஏப். 2ம் தேதி முடிவடைந்தது. இந்த சங்கங்களுக்கு ஏற்கனவே செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில், ஆக. 5, 6 தேதிகளில் 247 கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த சங்கங்களுக்கும் புதிதாக செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

அதேநேரம், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, பல்வேறு காரணங்களால் சேலம் மண்டலத்தில் 18 கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் தாமதமாக நடந்தது. இந்த சங்கங்களில் மட்டும் இன்னும் நிர்வாகக்குழு தொடர்கிறது. சேலம் சரகத்தில் உடையாப்பட்டி, ஏ.என்.புதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களும், ஆத்தூர் சரகத்தில் 6, ஓமலூர் சரகத்தில் 3 சங்கங்களிலும் நிர்வாகக்குழு தொடர்ந்து இயங்கி வருகிறது. 

 

இவை ஒருபுறம் இருக்க, முறைகேடு உள்ளிட்ட புகார்களின் பேரில் முன்கூட்டியே 17 சங்கங்களில் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அந்த கூட்டுறவு சங்கங்களுக்கும் செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை, செயலாட்சியர்களே அனைத்து நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்வார்கள்.