Skip to main content

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு; குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

convicts chawla case get released supreme court

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு தலைநகர் டெல்லி குர்கானிலிருந்து, குதுப்மினாரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 19 வயது பெண்ணை ராகுல்(27), ரவி(23), வினோத்(23) ஆகிய மூன்று பேர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்ட மூன்றாவது நாள் ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கடுமையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ராகுல்(27), ரவி(23), வினோத்(23) ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரவி  தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு இந்த மூன்று பேர் மீதும் கடத்தல், வன்புணர்வு, கொலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

 

இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூவருக்கும் தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், முக்தா குப்தா ஆகியோர்  மூவருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டனர். அத்துடன் இரையைத் தேடி அலையும் மிருகங்களைப் போல அலைந்து சமூகத்தில் வாழ்ந்திருக்க வேண்டிய பெண்ணை அழித்துவிட்டனர் என்று காட்டமாகக் கூறியிருந்தனர். 

 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரவி, ராகுல், வினோத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல், ரவி, வினோத் ஆகிய மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.  

 

இந்நிலையில் இந்தத் தீர்ப்பையொட்டி பெண்கள்  மீதான வன்கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் யோகிதா பஹ்யானா உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார். அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு முடிந்து வெளியே வந்த அந்தப் பெண்ணின் தாய், யோகிதா பஹ்யானாவிடம் இதுகுறித்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், இந்த கும்பல் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பின் அவரது கண்கள் மற்றும் காதுகளில் ஆசிட் ஊற்றப்பட்டு, ஸ்க்ரு ட்ரைவால் கண்களைக் குடைந்து, இன்னும் பல கொடூரமான செயல்களில்  ஈடுபட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.