Skip to main content

மோடியுடன் ஜோடியாக உன்னாவ் எம்.எல்.ஏ.! – விளம்பர போஸ்டரால் பரபரப்பு! 

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளவர் எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார். இந்தக் குற்றத்திற்காக சமீபத்தில் அவர் சார்ந்த கட்சியான பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

 

controversial poster of modi and unnao mla

 

 

இந்நிலையில், எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் இடம்பெற்றிருக்கும் ஒரு போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் படங்கள் அதில் இருப்பதும், சுதந்திர தின வாழ்த்துச் செய்திக்காக பாஜகவைச் சேர்ந்த ஒருவரே இந்த விளம்பரத்தை வெளியிட்டதும்தான், சர்ச்சைக்குக் காரணம்.

உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், உங்கு நகர் பஞ்சாயத்து சேர்மனும், பாஜகவைச் சேர்ந்தவருமான அனுஜ்குமார் தீக்சித் என்பவர்தான், இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். அனுஜ்குமாரை பாஜகவில் சேர்த்துவிட்டதே, பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குல்தீப் செங்கார்தான் என்கிறார்கள்.

இந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக அனுஜ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, தொகுதி எம்.எல்.ஏ. என்பதால் குல்தீப் செங்காரின் படத்தைப் பயன்படுத்தியதாக மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

இதுபற்றி விளக்கமளித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் ஷலப்மாணி திரிபாதி, “இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசையோ, கட்சியையோ சம்பந்தப்படுத்தத் தேவையில்லை. உன்னாவ் விவகாரத்தில் அரசும், கட்சியும் என்ன செய்யவேண்டுமோ, செய்துவிட்டது. செங்கார் மீது எந்த இரக்கமும் கிடையாது” என்றுள்ளார். 

2017-ஆம் ஆண்டு உன்னாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் தனது வீட்டில் வைத்து, 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார். இதுதொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், முதல்வர் யோகியின் வீட்டு முன்பு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார் அந்தச் சிறுமி. அப்போது கைது செய்யப்பட்ட அவரின் தந்தை, காவல்நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார்.

தொடர்ந்து வழக்கை நடத்தவிடாமல் மிரட்டல் வருவதாக சிறுமி தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் சிறுமியின் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது தாய், உறவினர் உயிரிழந்தனர். வழக்கறிஞரும், சிறுமியும் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குல்தீப் செங்கார் மீது சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், இந்த போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.