Congress Working Committee meets tomorrow!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நாளை (13/03/2022) கூடி ஆலோசிக்க உள்ளது.

Advertisment

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (13/03/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisment

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிவின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.