
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பா.ஜ.க அமைச்சர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் சட்டமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில், ‘லக்பதி தீதி’ திட்டன் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சரான அவினாஷ் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அமைச்சர் கூறிய கருத்தை சபையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானியிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், சபாநாயகர் அந்த கோரிக்கையை ஏற்காகததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால், காங்கிரஸ் மாநிலக் கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரே உள்பட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் முன்மொழியப்பட்டது. கூட்டத்தொடர் பல முறை ஒத்திக்கப்பட்ட பிறகு, இந்த தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அவர்கள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்றத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.