உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் கடும் சிரம்மத்திற்கு உள்ளாகியுள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் போலி மதுபானங்களும், கள்ளச்சாராயம் தயாரித்தலும் தற்போது அதிக அளவு நடந்து வருகின்றது. காவல்துறையினர் தினந்தோறும் ஏதாவது ஒரு கள்ளச்சாராயக் கும்பலைக் கைது செய்து வருவது வாடிக்கையாக நடந்து வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பரத் சிங், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசரைக் கொண்டு கை கழுவும்போது கையில் உள்ள வைரஸ் அழிந்து போவதை போல, ஆல்கஹால் நிறைந்துள்ள மதுவைக் குடிக்கும்போது தொண்டையில் உள்ள வைரஸ்கள் அழிந்துபோதும். எனவே கரோனாவை ஒழிக்க மதுக்கடைகளைத் திறந்துவிடுங்கள் என்று அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.