Skip to main content

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் - முழு விவரம்    

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

நாகலாந்து, திரிபுரா மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. மார்ச் 3ஆம் தேதி காலை தொடங்கி இரவு முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் :

 

modi amitshah



திரிபுராவில் மொத்தம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 60. இதில், சாரிலாம்  தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேந்திர நாராயண் தேவ்வர்மா உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளில், பாஜக  35 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களிலும் வென்றுள்ளன. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2013 தேர்தலில் 49 தொகுதிகளில் வென்று மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியை அமைத்திருந்தது. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பாஜக 43% வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42.7% வாக்குகளையும் காங்கிரஸ் 1.8% வாக்குகளையும் பெற்றுள்ளன.

 

manik sarkar



கடந்த முறை முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் தான் போட்டியிட்ட தண்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமையப்போகும் பாஜக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் பிப்லப் தேவ், பாணாமலிபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமலிருந்த பாஜக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதும், கடந்த முறை 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியின் வாக்குப்பதிவு வேட்பாளர் கொல்லப்பட்டதால் நிறுத்திவைக்கப்பட்டது. 59 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளையும் தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளையும் பாஜக 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான முகுல் சங்மா தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அதிக தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இல்லையென்பதால்  தேசிய மக்கள் கட்சி பாஜகவுடனும் சிறிய கட்சிகளுடனும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயலும். காங்கிரஸும் ஆட்சியமைப்பதை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகிறது.

 

mukul sangma

                                                                        முகுல் சங்மா


நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாகா மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 11 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களிலும் வென்றுள்ளன. இங்கு எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத காரணத்தால் இன்னும் சில நாட்களில் யார் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும். கடந்த ஆட்சியின் முதல்வர் டி.ஆர்.ஜிலியாங் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த மூன்று வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகளின் படி, வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை இல்லாத பாஜக, தன் கால்களைப் வைத்துள்ளது என்பது தெரிகிறது. 20 வருடங்கள் எளிமையான நேர்மையான முதல்வரென அனைவராலும் பாராட்டப்பட்ட மாணிக் சர்க்கார் மீண்டும் முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.     

 

 

        

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.