இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (26-05-25) குஜராத் மாநிலத்திற்குச் சென்றார். முதல்நாளான இன்று வதோரா பகுதியில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகனப் பேரணி) நடத்தினார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி சென்ற பிரதமர் மோடிக்கு, வழியெங்கும் இருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள், பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை தலைமையேற்று நடத்திய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர், பார்வையாளர்கள் வரிசையில் பொதுமக்களுடன் ஒன்றாக நின்று பிரதமர் மோடியை நோக்கி மகிழ்ச்சியோடு மலர்களைத் தூவினர். பிரதமர் மோடி, அவர்களைப் பார்த்து கைகளை அசைத்தபடி அங்கிருந்துச் சென்றார்.
இது குறித்து கர்னல் சோபியா குரேஷியின் இரட்டை சகோதரியான ஷைனா சன்சாரா கூறுகையில், “ரோடு ஷோவின் போது பிரதமர் மோடி எங்களை நோக்கி வணங்கினார், நாங்களும் அதற்கு வணக்கம் வைத்தோம். யாரும் பயப்படத் தேவையில்லை - நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்... என்ற செய்தியை அவர் அனுப்புவது போல் உணர்ந்தேன். அவள் என்னுடைய சகோதரி மட்டுமல்ல, இந்த நாட்டின் சகோதரி. பெண்கள் அதிகாரமளிப்பதற்காக பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார்” என்று கூறினார்.