Skip to main content

மின்வெட்டு அபாயம்; நிலக்கரி பற்றாக்குறை நிலவுமா? - மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

union coal minister

 

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 21 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 அனல் மின் நிலையங்களும், பஞ்சாப் மாநிலத்தில் 3 அனல் மின் நிலையங்களும், கேரளா மாநிலத்தில் 4 அனல் மின் நிலையங்களும் நிலக்கரி தட்டுப்பாடால் மூடப்பட்டுள்ளன. மேலும் சில மாநில அரசுகள் மின் வெட்டு ஏற்படலாம் என தங்கள் மாநிலத்தில் வசிப்பவர்களை எச்சரித்துள்ளனர்.

 

மேலும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், தேவையான நிலக்கரியை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசு, நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்றும் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கூறி வருகிறது. அதேநேரத்தில் சீனாவிலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்தநாடும் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகவும், இதனால் கூடுதலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் இந்தியாவின் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் மழை காரணமாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "மழை காரணமாக, நிலக்கரி பற்றாக்குறை இருந்தது. அதனால் சர்வதேசச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை 60 ரூபாயிலிருந்து 190 ரூபாயாக அதிகரித்தது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தும் மின்நிலையங்கள் 15-20 நாட்கள் மூடப்பட்டன. அல்லது குறைவாக மின் உற்பத்தியைச் செய்தன. இது உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. நேற்று நாங்கள் 1.94 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகம் செய்தோம். இது இதுவரை இல்லாத அளவிற்கான அதிகபட்ச நிலக்கரி விநியோகமாகும். மாநிலங்களைப் பொறுத்த வரையில், இந்த ஆண்டு ஜூன் வரை தங்களது கையிருப்பை அதிகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். சிலர் (சில மாநிலங்கள்) 'தயவுசெய்து ஒரு உதவி செய்யுங்கள், டான் இப்போது நிலக்கரியை அனுப்ப வேண்டாம்' எனக் கூறுகின்றனர். கடந்த கால நிலுவை இருந்தபோதும் நிலக்கரி விநியோகத்தைத் தொடர்ந்தோம். கையிருப்பை அதிகரிக்கும்படி மாநிலங்களைக் கேட்டுக்கொள்கிறோம். நிலக்கரி பற்றாக்குறை இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.