Skip to main content

"கனவுல கூட நினைத்துப் பாக்கல!" - பஞ்சாயத்துத் தலைவரான தூய்மைப் பணியாளர் உருக்கம்!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

The cleaner woman became the leader of the kerala panchayat election...

 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளின் கூட்டணியான 'எல்.டி.எஃப்.' பல அதியங்களை நிகழ்த்திவருகிறது.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள, பத்னாபுரம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிஷன் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற ஊராட்சி அலுவலகத்தில், கடந்த பத்து வருடமாகத் துப்புரவு வேலை செய்துவருபவர் ஆனந்தவல்லி என்கிற நடுத்தர வயதுப் பெண்.

 

அடிப்படையில் பட்டியலினச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணான ஆனந்தவல்லி, அந்த ப்ளாக் அலுவலத்தில் தினக்கூலி அடிப்படையில் காலை, மாலை கூட்டிப் பெருக்கி துப்புரவுசெய்து, பின்பு அங்குள்ள வீடுகளிலும் பாத்திரங்கள் துலக்கிப் பிழைப்பு நடத்திவந்துள்ளார். கணவர் மோகனன் சி.பி.எம்.-ன் ஊராட்சிச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பெயிண்ட்டிங் வேலையும் செய்துவருகிறார்.

 

ஆரம்பக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஆனந்தவல்லியை சி.பி.எம். இம்முறை பத்னாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தனது கேண்டிடேட்டாக நிறுத்தியது. மேல்தட்டு நடுத்தர வர்க்கம் என்று கலவையான ஜனத்தொகையைக் கொண்ட அந்தப் பொது வேட்பாளர்களுக்கான ஊராட்சியில், சேலஞ்சாக ஆனந்தவல்லியை சி.பி.எம். களமிறக்க, இதனை மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டனர் எதிர் வேட்பாளர்களான காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள்.

 

நான்கு முனைப் போட்டியில் கொதிநிலையில் களமிருந்தது. இறுதியில் மற்ற வேட்பாளர்களைவிட 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ஆனந்தவல்லி. அடுத்த அதிசயமாக எந்தப் ப்ளாக் ஆஃபீஸில் ஆனந்தவல்லி பத்துவருடமாகக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கினாரோ, அதே பத்னாபுரம் ஊராட்சியில், அவரைத் தலைவராக மாற்றிவிட்டனர் இடது சாரிகள்.

 

ப்ளாக் ஆபீஸை சுத்தப்படுத்திய ஆனந்தவல்லி, தற்போது ஊராட்சியையே சுத்தப்படுத்தக் கிளம்பியிருக்கிறார். “நான் கனவில கூட இந்த மாதிரி நடக்கும்னு நினைச்சுபாக்கல. தினமும் ஆஃபீஸ்ல நடக்குறதுப் பாத்திருக்கேன். பார்ட்டி தந்த வேலய நிச்சயம் நல்லபடியாச் செய்வேன்” என்கிறார் ஆனந்தவல்லி.

 

cnc

 

21 வயது கல்லூரி மாணவியான ஆரியா ராஜேந்திரன் சி.பி.எம்.மின் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர். அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, பொதுத் தொகுதியில் நிற்கவைத்து அதன் தலைவராகவும் மாற்றியதோடு கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள்.

 

இந்தியாவில் எந்த மூலையிலும் துப்புரவுத் தொழிலாளி பெண் ஒருவர் அதே அலுவலகத்தின் தலைவராக மாறியதாக, வரலாறில்லை என்கிறார்கள் அக்கட்சியினர்.

 

இதனால்தான், கேரளா கடவுளின் தேசமோ...!
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.