Skip to main content

அவர்கள் மாணவர்களாக இருப்பதால்... மாணவர்கள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து...

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.

 

cji babde about jamia university students protest against cab

 

 

இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சம்பவங்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் கொண்டுவந்தார். இதில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக கோரப்படும் நிலையில் நீதிமன்றம் இதனை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, "நாங்கள் உரிமைகளை நிலைநாட்டுவோம். ஆனால் அது கலவரங்களின் போது அல்ல. முதலில் கலவரங்கள் நிறுத்தப்படட்டும். பின்னர் நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்கும். நாங்கள் உரிமைகள் மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. வன்முறை மற்றும் பொது சொத்துக்களை அழித்தல் தொடரும் வரை நீதிமன்றம் இதனை விசாரிக்க முடியாது. அவர்கள் மாணவர்களாக இருப்பதால், அவர்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிஏஏ போராட்டங்களில் குழந்தைகள்! -ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என வாதம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய அளவிலான குற்றம் என சி.ஏ.ஏ. போராட்டங்களை எதிர்த்த வழக்கில் வாதிடப்பட்டுள்ளது.

 

Children in CAA struggle!- highcourt

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்ணன், கோபிநாத், ஸ்ரீதரன், தமிழழகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் கண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், காவல்துறை அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் போராடி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.  மேலும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுதான் சரியாக இருக்குமே தவிர, இதுபோன்ற போராட்டம் நடத்துவதை சட்டவிரோதமாகத்தான் கருத வேண்டும் என்று வழக்கறிஞர் பிரபாகரன் வலியுறுத்தினர். தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 83 உட்பிரிவு 2-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், அதன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பிரிவின் கீழ் காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து,  பிற மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், போராட்டங்கள் தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அந்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு   ஒத்திவைத்தனர்.

 

 

Next Story

காட்டுமன்னார்கோவிலில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் 

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் தொடர்ந்து நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தின் 26-வது நாளில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

kattumannar kovil incident

 

இந்தநிலையில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய பொதுமக்களும் லால்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. வங்கி திறந்ததும் உள்ளே சென்று எங்கள் அனைவருக்கும் நாங்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தை எடுத்துக் கொள்கிறோம் என்று வங்கி மேலாளரிடம் கூறினார்கள். வங்கி மேலாளர் அவ்வளவு பணம் வங்கியில் இருப்பு இல்லை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதனால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் எங்களுடைய பணம் முழுமையாக கிடைக்க வேண்டும். மத்திய மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் பல கட்டமாக தொடரும் என்று கூறினார்கள். 

 

kattumannar kovil incident


இதனைத் தொடர்ந்து வங்கியில் இருப்பு இருக்கும் வரை ஒருவருக்கு ரூபாய் 49 ஆயிரத்து 900 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனை அனைவருக்கும் கொடுக்க முடியாததால் வங்கியில் பணம் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தினமும் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.