chinmayanand case victim turns her statement

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, இதற்கு முன்பு தான் கூறிய அனைத்து புகார்களையும் மறுத்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியான மறுநாள் அந்த மாணவி மாயமானார். தனது மகள் மாயமானதற்குப் பின்னால் முன்னாள் மத்திய இணையமைச்சர் சின்மயானந்தா இருப்பதாக, அவரது தந்தை வழக்குப் பதிவு செய்தார்.

Advertisment

இந்த நிலையில், அந்த மாணவி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மீட்கப்பட்டு, பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, சின்மயானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார். மேலும் சின்மயானந்தா தன்னை போல பல சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து சின்மயானந்தா இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சின்மயானந்தா மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக 5 கோடி ரூபாய் பணம் கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அப்பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வந்த சூழலில், இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் புகார் அளித்திருந்து மாணவிக்கு ஜாமீன் அளித்தது. பின்னர், சின்மயனாந்தாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, லக்னோ 'எம்.பிஎம்.எல்.ஏ' நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.

Ad

இந்நிலையில், லக்னோ நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அந்த மாணவி, தான் சின்மயனாந்த் மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் கூறவில்லை என்று கூறி, தான் முன்பு கூறிய குற்றச்சாட்டையும் மறுத்தார். மாணவியின் இந்த திடீர் பிறழ்சாட்சியால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர், அந்தப் பெண் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார் என்பதால், சி.ஆர்.பி.சி 340ன் கீழ் நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.