Skip to main content

டெல்லி முதல்வர் மீது மிளகாய் பொடி வீச்சு....

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
kejriwal


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது இளைஞர் ஒருவர் மிளகாய் பொடியை தூவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தலைமை செயலகத்தில் மதிய உணவு இடைவேளைக்காக தனது அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொடி வீசியவர் பெயர் அணில் ஷர்மா என்று தெரிய வந்துள்ளது.  இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, அவரது காலில் விழுந்துள்ளார். அதை கெஜ்ரிவால் தடுக்கும்போது, திடீரென அந்த இளைஞர் குட்கா பாக்கெட்டில் கொண்டுவந்த மிளகாய் பொடியை அரவிந்த் கெஜ்ரிவால் முகத்தில் வீசியுள்ளார். பின்னர், அவரை காவல்துறையினர் பிடித்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதனை தொடர்ந்து, ”டெல்லியில் காவல்துறை மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கிறது. டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்காமல் இருக்கிறார்கள்” என்று ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது.  இந்த சம்பவத்தை போல ஏற்கனவே பலமுறை அரவிந்த் கெஜ்ரிவால் தனிநபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arvind Kejriwal's aide's house raided by the enforcement department

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்! 

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Enforcement department summons Delhi Chief Minister Arvind Kejriwal

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும் அமலாக்கத்துறையின் சம்மன்கள் பொய்யானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் ஜனவரி 18 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.