உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 'பிரதமர் நரேந்திர மோடி எதிர்கட்சியைக் கண்டு பயப்படவில்லை, அவர் சந்திக்கும் ஆபத்து என்றால் நாட்டின் அறிவார்ந்தவர்களின் அமைதிதான்' என்று கூறியுள்ளார்.
ஆக்ராவில் பாஜக சார்பில் 'பிரத்துத் ஜன் சம்மேளம்' என்ற கூட்டம் நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்காக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, "மோடியை எதிர்த்து கூச்சல் போடும் எதிரிகளிடம் கடந்த நான்கு வருடத்தில் மோடி செய்த சாதனைகளைச் சொல்லி அறிவார்ந்தவர்கள் அவர்களை அமைதிப்படுத்திவிட்டால், கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றுவிடுவார்" என்றார்.
மேலும், இந்த கூட்டம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது என்றும் அறிவுப்பூர்வமாகப் பேசி மோடிக்கு ஆதரவு திரட்ட வேண்டுமென்றும் அவர் கூறினார். "காங்கிரஸ் மற்றும் பிற எதிர் கட்சிகள் இந்த நாட்டு மக்களை மதச்சார்பின்மை என்ற ஒன்றைக் கூறியே ஏமாற்றிவருகின்றனர். ஆனால் அவர்களேதான் மக்களை சாதிகளாகவும், மதங்களாகவும் பிரித்துவைத்துள்ளனர்" என்று கூறினார்.
"நரேந்திர மோடி இந்த நாட்டை வளர்ச்சியடைந்த ஊழலற்ற நாடாக மாற்ற அமைதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" என்ற அவர் மோடி ஆட்சியில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றை வரிசைப்படுத்தினார். பிறகு "மோடி 2019ஆம் ஆண்டில் வெற்றிபெறவதற்கு, அறிவாந்தவர்களின் ஆதரவு இருந்தால் மட்டும் போதும், வெற்றி சாத்தியமாகும்" என்று முடித்துக் கொண்டார்.