பணமதிப்பிழப்பு குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் புதிய தகவல்...மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் மத்திய அரசின் நடவடிக்கை...

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

modi

அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது என தற்போது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெங்கடேஷ் நாயக் என்பவர், தகவல் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் பணமதிப்பிழப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் கருத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில், "கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது ஆகியவை வரவேற்க தக்க நடவடிக்கைகள் தான். ஆனால் அதற்காக பணமதிப்பிழப்பு செய்தல் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மேலும் பெரும்பாலான கருப்பு பணம் ரொக்கமாக இல்லை. அவை தங்கமாகவும், வீட்டு மனைகள், வீடு என வேறு வடிவங்களிலிலேயே உள்ளன. எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை கருப்பு பண ஒழிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என ரிசர்வ் வாங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் பணமதிப்பிழப்பு குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில், "பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. ஆனால் பிடிவாத அரசு அந்த முரட்டுத்தனமான முடிவை எடுத்தது. ரிசர்வ் வங்கி எச்சரித்தது தானே நடந்திருக்கிறது? எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன? எத்தனை பேர் வேலை இழந்தார்கள்? பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டு பிடித்த உத்தி" என பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணமதிப்பிழப்பு சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது பாஜக -வுக்கு புதிய சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.

Demonitization modi
இதையும் படியுங்கள்
Subscribe