ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ கைது செய்தது.
இதனையடுத்து அவரது காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்று காலை 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது.