Skip to main content

அதிகார உரிமை குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு! முதல்வர், துணைநிலை ஆளுநர் மாறுபட்ட கருத்து! 

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தார்.


இதை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி அடங்கிய 2 நபர் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், கூட்டாட்சி தத்துவத்தின் படி துணைநிலை ஆளுநரும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் (11/03/2020) தீர்ப்பு வழங்கியது. 


இந்த தீர்ப்பையடுத்து சமூக வலைத்தளங்களில் கருத்தை வெளியிட்டுள்ள கிரண்பேடி, 'சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மத்திய அரசு மற்றும் புதுவை நிர்வாகியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் மற்றும் அதன் விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது. இதை நாம் அனைவரும் மதிக்கிறோம். 

CHENNAI HIGH COURT PUDUCHERRY CM AND GOVERNOR

பொதுமக்களின் நன்மைக்காக ஒருமைப்பாடு மற்றும் திட்டமிட்ட செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம். புதுவை யூனியன் பிரதேசம் பல்வேறு விஷயங்களில் சிறந்த திறனை கொண்டுள்ளது. ஆளுநர் அலுவலகமும், அவரது குழுவும் சட்டத்துக்கு இணங்க பொதுமக்களின் நன்மைக்காக பணியாற்ற உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 


அதேசமயம் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "156 பக்கமுள்ள அந்த தீர்ப்பின் கடைசி பக்கத்தில் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியை மாநிலமாக கருத முடியாது என்ற கருத்து மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில கருத்துகளையும் நீதிபதிகள் சரியாக கூறியுள்ளனர்.


துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்று தான் செயல்பட வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்க தான் நிர்வாகத்திற்கு முழு பொறுப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம், யூனியன் பிரதேச சட்டத்தில் கூறியுள்ளபடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையை தாண்டி யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. தனிப்பட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் ஏதும் இல்லை. 


சட்டமன்றத்தில் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்கள் தீர்ப்பு தான் பெரியது என கூறியிருப்பதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும். நியமிக்கப்பட்டவர்ளுக்கு இல்லை. சட்டசபையை மீறிய அதிகாரம் யாருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்படி கொடுத்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இந்த நிலையில் அமைச்சர்களை அழைத்து கோப்புகள் பற்றி விசாரிப்பேன் என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. அமைச்சர்கள் ஆளுநர் வீட்டு வேலைக்காரர்கள் இல்லை. தன்னிச்சையாக செயல்பட்டு தர்பார் நடத்துவதையும் விட்டு விட வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும்.


முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக செயல்படுவது என தனியாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். இந்த வழக்கில் உச்சபட்சமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள். 


தீர்ப்பைப் பின்பற்றி அதனை மதித்து நடக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நிலையை தெரிவிப்பேன். அதன் படி நடந்து கொள்ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்.  நீதிமன்ற தீர்ப்பு முழுமையும் மக்களாட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.