ADVERTISEMENT

விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு... புகைப்படத்தை வெளியிட்ட 'நாசா'!

08:45 AM Dec 03, 2019 | santhoshb@nakk…

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விக்ரம் லேண்டர் பாகங்களையும், விழுந்த இடத்தையும் கண்டுபிடித்தது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

ADVERTISEMENT

நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. மேலும் நிலவுக்கு தாங்கள் அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திராயன்- 2 விண்கலத்தை GSLV மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.


செப்டம்பர் 7- ஆம் தேதி நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர், அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க ஆயத்தமானது. படிப்படியாக தரையிறங்கும் கட்டளை பெங்களூரு மையத்தில் இருந்து அளிக்கப்பட்டது. அப்போது விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மேலும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தது. இருப்பினும் ஆர்பிட்டர் (orbiter) கருவி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தகவலை சேகரித்து அனுப்பும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.


இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறிப்பட்டதாக 'நாசா' தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் "சந்திரயான் 2 விக்ரம் லேண்டரை எங்கள் @ASNASAMoon திட்டம், சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது" என குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.


விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை, செயல்பட வைப்பது தொடர்பாக நாசா விஞ்ஞானிகளுடன் ஆலோசனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT