Chandrayaan reaches milestone - 3 spacecraft

இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் இடத்தில் உந்து சக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தி வந்தனர்.

Advertisment

அந்த வகையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு என விண்கலத்தின் உயரம் உயர்த்தும் நடவடிக்கை சிறு சிறு இடைவெளிகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. திட்டத்தின்படி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்பட்டது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான் - 3ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தி இருந்தது.

Advertisment

அதன்படி கடந்த 6 ஆம் தேதி முதல் சுற்று வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதை 174 கிமீ X 1437 கிமீ என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டது. கடந்த 14 ஆம் தேதி அடுத்தகட்ட சுற்று வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையின் படி 3வது முறையாக சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப் பாதையின் உயரம் 18 ஆயிரம் கி.மீ. சுற்று வட்டப் பாதையில் இருந்து ஆயிரத்து 347 கி.மீ. வரை உயரம் குறைக்கப்பட்டது. ஏற்கனவே 4 முறை குறைக்கப்பட்ட நிலையில், நேற்று 153×163 கி.மீட்டராக நிலவின் சுற்று வட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்திரயான் - 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்குநிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்க உள்ளது. சந்திரயான் - 3 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. ஏற்கனவே நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.