Skip to main content

மனைவிக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Chandrababu Naidu on hunger strike in jail in support of his wife

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 

கடந்த 23 நாட்களாக சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த வழக்கு பொய் வழக்கு எனவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கையை கண்டித்து,  காந்தி ஜெயந்தி நாளான நேற்று (02-10-23)  சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி நேற்று ராஜமகேந்திரவரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருடன், கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர், கட்சித் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

 

இதனை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ‘சத்யமேவ ஜெயதே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடுவும் சிறையில் இருந்து கொண்டே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதே போல், சந்திரபாபுவின் மகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை கருத்து; பா.ஜ.க. அமைச்சரை கண்டித்து பெண் எம்.பி.க்கள் போராட்டம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Controversial comment on Mamata Banerjee; Women MPs who participated in the protest

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 5 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்தார். அந்த விழாவில், திரைப்பட நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, மகேஷ் பட், அனில் கபூர் மற்றும் பலருடன் இணைந்து முதல்வர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதனையடுத்து, மம்தா பானர்ஜி நடனமாடுவது குறித்து மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “முதல்வர் மம்தா பானர்ஜி திரைப்பட விழாவில் பங்கேற்று நடனமாடுவது ஏற்புடையதல்ல” என்று கூறினார். அதோடு மட்டுமல்லாமல், சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கருத்து தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, “நாட்டிலுள்ள ஒரே பெண் முதல்வரை மத்திய அமைச்சர் அவதூறாகப் பேசியுள்ளார். அவருடைய பேச்சு வெட்கக் கேடானது மட்டுமல்லாமல் இது பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு ஆகும். இதுபோன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமா? இதுதான் பா.ஜ.க மற்றும் அக்கட்சியின் அமைச்சர்களின் பிரச்சனை ஆகும். பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். 

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இன்று (07-12-23)  நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பேசிய மத்திய இணை அமைச்சரை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் இன்று (07-12-23) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது அமைச்சர் கிரிராஜ் சிங் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். 

Next Story

ராஜ்புத் இயக்கத் தலைவர் கொலை; ரயில், சாலை மறியல் போராட்டம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Rajput movement leader lost his life so Rail and road strike

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும், இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சிங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இதை தொடர்ந்து, கர்னி சேனா அமைப்பினர், சுக்தேவ் சிங்கின் கொலையை கண்டித்து  ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், மோதபூர், பண்டி, அஜ்மீர், சவாய், கோடா, சிதோர்கர், ஜலாவர், பாரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.