Skip to main content

ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Champai Soren, sworn in as Jharkhand Chief Minister today

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த சூழலில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (31.01.2024) சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து ஜார்கண்ட் மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அடுத்து சம்பாய் சோரன் இன்று (02.02.2024) ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹேமந்த் சோரன் ஏன் கைது செய்யப்பட்டார்?; மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 19.04.2024 தொடங்கிய தேர்தலானது வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி சார்பாக, பீகார், பெங்களூர், மும்பை, டெல்லி என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள், தொகுதி பங்கீட்டில் சில கருத்து மோதல்கள் இருந்தாலும், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சுரங்க முறைகேட்டின் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்தியா கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதே போல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சிகள், பா.ஜ.க மீது குற்றச்சாட்டு வைத்தும், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று (21-04-24) இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலை குனிவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினரை அவமதித்துவிட்டார். பழங்குடியினரை தொடர்ந்து பயமுறுத்தினால் பா.ஜ.க அழிந்துவிடும். பழங்குடியினரை தீண்டத்தகாதவர்களாக பா.ஜ.க கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 180 இடங்களையே வெற்றி பெறும்” என்று கூறினார்.

Next Story

போராட்டத்திற்கு தயாராகும் முதல்வர்களின் மனைவிகள்!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Hemant Soren wife met with Kejriwal wife!

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கடந்த 28ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பான சோர்ன் சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஜார்கண்ட் முதல்வாக இருந்த் ஹேமந்த் சோரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பாஜக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகத்தான் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் தான் சுனிதா கெஜ்ரிவாலை கல்பனா சோரன் சந்தித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், “ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ, அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.  துயரத்தை பகிர்ந்துகொண்டேன். நாங்கள் இருவரும் எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து  ஆலோசனை நடத்தினோம்" எனத் தெரிவித்தார்.