Skip to main content

ரூ.200ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி; மத்திய உயிரிதொழில் நுட்பத்துறை அறிமுகம்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Cervical cancer vaccine at Rs.200; Introduced by Central Department of Biotechnology

 

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் கடந்த ஜூன் 8ல்  மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பலகட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய உயிரியல் தொழில் நுட்பத்துறையும் சீரம் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தடுப்பூசியின் ஆரம்ப விலை  200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என சீரம் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கரோனா தடுப்பூசியைக் கட்டாயப்படுத்த முடியாது"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

"Corona vaccine cannot be enforced" - Supreme Court ruling!

 

கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில், தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர், கரோனா தடுப்பூசிப் பரிசோதனை தொடர்பான தரவு ஆய்வுகளை வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தொடர்ந்தார். மேலும், கட்டாயத் தடுப்பூசிக்கான பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, எந்தவொரு தனிநபரையும் கட்டாயம் தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளுமாறு கூற முடியாது என்று தீர்ப்பளித்தனர். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்கவும் அறிவுறுத்தினர். அரசமைப்பு பிரிவு 21- ன் கீழ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 


 

Next Story

'இனி வாராந்திர தடுப்பூசி முகாம் இல்லை' என அறிவிப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Announcement 'No more weekly vaccination camp'!

 

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இனி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாரந்தோறும் மிகப்பெரிய அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை தமிழக மருத்துவத்துறை நடத்தி வந்தது. தொடக்கத்தில் வாரம் ஒரு முறையும், பின்னர் இரு முறையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றின் மூலம் மட்டும் 4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, கரோனாவின் தாக்கம் குறைந்திருக்கும் நிலையில், வாரந்தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள மருத்துவத்துறை, தேவைப்படும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசிகளை வழக்கம் போல் செலுத்திக் கொள்ளலாம் என்றும் மருத்துவத்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 49.03 லட்சம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 1.37 கோடி பேர் செலுத்திக் கொள்ளவில்லை. அதேநேரத்தில் 3,292 கிராம பஞ்சாயத்துக்கள், 121 நகராட்சிகளில் 100% கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.