ADVERTISEMENT

"தடுப்பூசிக்காக மாநிலங்கள் இனி செலவழிக்கத் தேவையில்லை" - பிரதமர் மோடி அறிவிப்பு!

06:10 PM Jun 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மாநிலங்கள் இனி தனியே தடுப்பூசி கொள்முதல் செய்யத் தேவையில்லை என்றும், ஏழை மக்களுக்கு தீபாவளி வரை ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு: உலகத்தின் பெரும்பாலான நாடுகள், கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத பெருந்தொற்று உலக மக்களைப் பாதித்து வருகிறது. கரோனாவால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறோம். இதுவரை இல்லாத அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்திருக்கிறோம். இந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பல பாடங்களை நாம் கற்று வருகிறோம். மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பி வழிவதை நாம் கண்டுள்ளோம். கரோனா தொற்றால், மருத்துவத்துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிக்கும் கொண்டு சென்றுள்ளோம். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை விரைவாகக் கொண்டுசெல்லும் வசதி பெற்றிருக்கிறோம். கரோனா அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.

இதற்கு முன் இல்லாத வகையில் தடுப்பூசியை விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். வரலாற்றில் இல்லாத அளவு தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். தடுப்பூசி பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். கரோனாவை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையைத் தொடங்கியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க, கடைசி வரை நாம் தடுப்பூசியைக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடைமை. எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பு நிரந்தரமாக இருக்கும். ஒரே ஆண்டில் இந்தியா இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் கிடைக்காமல் இருந்திருந்தால், பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இதுவரை 23 கோடி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா குறித்த உலகநாடுகளின் சந்தேகத்திற்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். தடுப்பூசிக்கான ஏற்பாடுகளைக் கடந்தாண்டு ஏப்ரலிலேயே மத்திய அரசு செய்யத் தொடங்கிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும். மேலும் வெளிநாடுகளிலிருந்து மூன்று தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். மிகக்குறுகிய காலத்தில் தடுப்பூசிகளைத் தயாரித்து மக்களுக்குச் செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீரும். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்கள பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றினர்.

ஏழு நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மாநிலங்கள் நாங்கள் ஏன் தடுப்பூசியைத் தயாரிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு வகுத்துள்ள விதிகளின்படியே செயல்படுகின்றன. பொது முடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுப்பதை மாநிலங்களிடமே விட்டுள்ளோம். தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே அதிக அளவு தயாரிக்க, மத்திய அரசு முயன்று வருகிறது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கேற்ப தடுப்பூசி கொள்கைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்கிறோம். மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கைகளில் மாநிலங்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிவரை மத்திய அரசு மட்டுமே தடுப்பூசி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. தடுப்பூசி விநியோகத்தில் இனி மத்திய அரசே முடிவெடுக்கும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்படும். கரோனா தடுப்பூசிக்காக மாநிலங்கள் இனி செலவழிக்கத் தேவையில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தைத் தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்குச் செலுத்தலாம். அவற்றை மக்கள் கட்டணம் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும். ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்குத் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும். மாநில அரசுகள் இனி தனியாகத் தடுப்பூசியைக் கொள்முதல் செய்யத் தேவையில்லை. தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும். நவம்பர் மாதம் 80 வரை கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT