Advertisment

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

central govt has called for an all party meeting

Advertisment

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் (31.01.2025) தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு (2024) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை (6வது முறை) தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலையடுத்து ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை (7வது முறை) தாக்கல் செய்தார். இதன் மூலம் 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விவகாரம், வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி நாளை (30.01.2025) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று (29.01.2025) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கவுள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எம்.பி.க்களுடன் திமுக ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe