‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மத்திய அரசு விளக்கம்!

Central govt explains about Operation Sindoor

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 1 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 22, 2025 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கி, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 25 இந்தியர்களையும் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றனர். அவர்கள் சுற்றுலாப் பயணிகளின் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தலையில் சுட்டனர். அந்தக் குடும்பத்தினர் மிரட்டப்பட்டு, அந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் செய்தியைத் தெரிவிக்கச் சொன்னார்கள். ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா மீண்டும் செழித்து வருவதால், இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் அதை சேதப்படுத்துவதாகும்.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு முன்னணி (The Resistance Front) என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்- இ - தொய்பாவுடன் தொடர்புடையது ஆகும். இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 அன்று, ஊடக வெளியீட்டிலிருந்து எதிர்ப்பு முன்னணி (TRF) பற்றிய குறிப்பை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் அழுத்தம் புறக்கணிக்கப்படக்கூடாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை அமைப்புகள், இந்தியா மீது மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதும் சமாளிப்பதும் அவசியம் என்று கருதப்பட்டது. பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனம் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் நெருங்கிய தூரத்திலும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்னாலும் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட விதம் குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்தியா மீது மேலும் தாக்குதல்கள் நடக்கவுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே தாக்குதலை தடுக்க கட்டாயப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக எனவே இன்று இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா தனது எதிர்வினையாற்றும் உரிமையைப் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பைத் தகர்ப்பதில் கவனம் செலுத்தியது” எனத் தெரிவித்தார்.

Operation Sindoor jammu and kashmir Pahalgam foreign secretary
இதையும் படியுங்கள்
Subscribe