ADVERTISEMENT

பிரதமர் மோடிக்கு தலைவலியாய் மாறிய ஆவணப்படம்; தடை விதித்த மத்திய அரசு 

12:07 PM Jan 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (India: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டங்கள் தெரிவித்ததோடு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இருப்பினும், தொடர்ந்து ஆவணப்படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு ஆவணப் படத்துக்கான இணைப்பும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது.

இந்நிலையில் இத்தகைய பதிவுகள் உட்பட மோடியின் ஆவணப்படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பதிவு, வீடியோ என அனைத்திற்கும் மத்திய அரசு தற்போது தடை விதித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மோடி தொடர்பான ஆவணப்படம் குறித்த பதிவுகளை நீக்கி வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT