ADVERTISEMENT

காவிரி நதி நீர் விவகாரம்; உச்சநீதிமன்றத்தை நாடும் கர்நாடக அரசு

10:31 AM Aug 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். காவிரியில் தங்கள் மாநிலத்திற்கே உரிய நீர் இல்லை என மனுவில் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முடிவு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதே சமயம் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிக்கை வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT