காவிரி நதி நீர் விவகாரம்; உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு 

Cauvery water issue Adjournment of Supreme Court hearing

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது கடினம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விட கோரியும், 8.988 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தவறிவிட்டது என 6 முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை கொண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரணைமேற்கொள்ளாததால் காவிரி வழக்கு விசாரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

cauvery
இதையும் படியுங்கள்
Subscribe