Skip to main content

"அவர்களின் தியாகத்தை கவுரவப்படுத்துவோம்... உணர்வற்றதாக இருக்கிறது மோடி அரசு" - சோனியா காந்தி விமர்சனம்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

sonia gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பரபரப்பான சூழலில் நடைபெற்றவரும் நிலையில், இன்று (08.12.2021) காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, விவசாயிகள் பிரச்சனை, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது வருமாறு,

“விவசாயிகளின் ஒற்றுமை, விடாமுயற்சி, அவர்களின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை ஒரு திமிர்பிடித்த அரசாங்கத்தை இறங்கி வர வைத்துள்ளது. அவர்களின் ஆகப்பெரும் சாதனைக்காக அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். கடந்த 12 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்பதை நினைவில்கொள்வோம். அவர்களின் தியாகத்தைக் கவுரவப்படுத்துவோம்.

 

சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை, சாகுபடி செலவுகளுக்கு ஏற்ற லாபமான விலை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ஆகிய விவசாயிகளின் கோரிக்கைகளில் அவர்களுடன் நிற்பது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மோடி அரசு எப்படி, ஏன் இவ்வாறு உணர்வற்று இருக்கிறது என்பதையும், ஏன் பிரச்சனையின் தீவிரத்தை தொடர்ந்து மறுக்கிறது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது மக்கள் படும் இன்னல்களைப் பொருட்படுத்தாதது போல் தெரிகிறது.

 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் போதுமானதல்ல. நடவடிக்கை எடுக்க அதற்கு அதிக இடமிருக்கும்போதும் வழக்கம்போல், வரி குறைப்புக்கான பொறுப்பை நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளிடம் மத்தி அரசு ஒப்படைத்துள்ளது. 100 கோடி தடுப்பூசி செலுத்தியதை அரசாங்கம் கொண்டாடியது, ஆனால் அது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக என்று அரசு கூறவில்லை. ஆண்டு இறுதிக்குள் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கிற்கு பக்கத்தில் கூட நாடு இல்லை. முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. ஆண்டு இறுதிக்குள் 60 சதவீத மக்கள் தொகைக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்றாலும், தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.