Skip to main content

தென்னிந்திய மாநிலங்கள் இன்றி நாட்டின் வளர்ச்சியை கற்பனைக்கூட செய்ய முடியாது - அமித் ஷா!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021


 

amit shah

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நேற்று (14.11.2021) ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி முதல்வரும் பங்கேற்றனர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சார்பாக அம்மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பாக அமைச்சர் பொன்முடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் நிலுவையில் இருந்த 51 பிரச்சனைகளில் 40 தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சியைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அமித் ஷா பேசியதாவது,

 

“தென்னிந்திய மாநிலங்களின் பண்டைய கலாச்சாரமும், மரபுகளும், மொழிகளும் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்டைய பாரம்பரியத்தையும் வளப்படுத்துகின்றன. தென்னிந்திய மாநிலங்களின் மிக முக்கியமான பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்க முடியாது.

 

கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் விகிதத்தை மாநிலங்கள் விரைவுபடுத்த வேண்டும். அதனை முதலமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை திறம்பட நிர்வகிப்பதற்கு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து மாநிலங்கள் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். போதைப்பொருள் நெட்வொர்க்குகளை மாநிலங்கள் ஒடுக்க வேண்டும்.

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மாநிலங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்து மாநிலங்களும், உள்ளூர் மொழி பாடத்திட்டத்துடன் கூடிய ஒரு தடய அறிவியல் கல்லூரியையாவது உருவாக்க வேண்டும். இதன்மூலம் தடயவியல் விசாரணைக்குத் தேவையான பயிற்சி பெற்ற மனித வளத்தை நாம் பெற வேண்டும். மோடி அரசு அனைத்து உள்ளூர் மொழிகளையும், கலாச்சாரங்களையும் மதிக்கிறது.”

இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; டெல்லியில் பா.ஜ.க. முக்கிய ஆலோசனை!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Parliamentary elections approaching; BJP in Delhi Important advice

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.