Skip to main content

தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

telecom sector

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொலைத்தொடர்புத் துறையில், நேரடி வழியில் (automatic route) 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் அனுமதியின்றியே தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களால் நேரடியாக 100 சதவீத முதலீட்டைச் செய்ய முடியும்.

 

தற்போது வரை மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களால், இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 49 சதவீத முதலீட்டை மட்டுமே நேரடியாகச் செய்யமுடியும் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இருப்பினும் தொலைத்தொடர்புத் துறையில் மத்திய அரசின் அனுமதியின்றி 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு என்பது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலத்தில் அரங்கேறிய தொலைத்தொடர்பு மோசடி; சவுதி வரை நீளும் தொடர்புகள் 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

salem international calls converted local calls cyber action 

 

சேலத்தில் ஓரிரு இடங்களில் மர்ம நபர்கள், அலைபேசிகளுக்கு வரும் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து வருவதாக சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை உளவுப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, மாநில உளவுத்துறையினர், சேலம் மாவட்ட கியூ பிரிவினர், கொண்டலாம்பட்டி காவல் துறையினர் ஆகியோர் சேலம் கொண்டலாம்பட்டி செல்வ நகரில் சந்தேகத்திற்கு இடமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் கடந்த 13 ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். காவல்துறையினர் சோதனைக்குச் சென்றிருந்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றம் செய்வதற்கான ரிசீவர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், சில உயர் தொழில்நுட்ப அலைபேசிகள் இருந்தன. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வாலிபர், வீட்டு உரிமையாளரிடம் கொடுத்த ஆதார் அட்டை, ஊர், பெயர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது. அவர் தனது சொந்த ஊர் பெங்களூரு என்று கூறியுள்ளார். அந்த வாலிபரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹைதர் அலி (வயது 40) என்பது தெரிய வந்தது. அதே ஊரைச் சேர்ந்த அமீர் என்பவர் சவுதி அரேபியாவில் உள்ளார் என்றும், அவரிடம் ஹைதர் அலி மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

 

சவுதி அரேபியாவில் இருந்து அமீர், சர்வதேச அழைப்புகளை சேலத்தில் உள்ள ஹைதர் அலிக்கு மாற்றி விடுவதும் இவர் அந்த அழைப்புகளை தமிழ்நாடு வட்டத்திற்கு மாற்றி விடுவதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்ற குற்றச்செயலில் சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒருவரும் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கிருந்து 100 சிம் கார்டுகளும், ரிசீவர் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டில் தங்கியிருந்த நபர்கள் குறித்து விசாரித்த போது அவர்களும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஷிதாஸ் முகமது (வயது 28), மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வால் (வயது 33) என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் சோதனை நடத்த வருவதை அறிந்த அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த கும்பல் பயங்கரவாத கும்பலுக்கு உதவும் வகையில் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றினார்களா? இவர்கள் பின்னணியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? வேறு எந்தெந்த மாநிலத்தில், மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்  என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

இந்த இரண்டு கும்பலுக்கும், சவுதி அரேபியாவில் உள்ள அமீர் தான் மூளையாகச்  செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இருவரையும் பிடித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தேவைப்படுமானால் இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை காவல்துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

 

Next Story

இரண்டு வாலிபர்களால் லட்சங்களை இழந்த தொலைத் தொடர்புத் துறை! 

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

th

 

சேலத்தில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் போலி தொலைபேசி நிறுவனம் நடத்தி வந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர்கள், சர்வதேச அழைப்புகளை எல்லாம் உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

சேலத்தில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, மோசடி நடந்து வருவதாக சென்னை உளவுப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உளவுப்பிரிவு மற்றும் தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் சேலம் வந்தனர். சேலம் கொண்டலாம்பட்டி செல்வ நகர் நடுத்தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஒரு வாலிபர், கடந்த நான்கு மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். 

 

இதையடுத்து திங்கள்கிழமை (பிப். 13, 2023) உளவுப்பிரிவினர் மற்றும் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் அந்த வீட்டிற்குச் சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பத்துக்கும் மேற்பட்ட ரிசீவர்கள், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் உபகரணங்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த அறையில் லைட் கேமரா ஒன்று இயக்கத்தில் இருந்தது. அந்த கேமராவை காவல்துறையினர் எதேச்சையாக தொட்டபோது அந்த அறையில் இயக்கத்தில் இருந்த அனைத்து மின்னணு சாதனங்களும் செயல் இழந்தன. அங்கிருந்து 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர். அந்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்றும், மாதம் 6 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த ரிசீவர் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

இதேபோல சேலம் மெய்யனூர் மஜித் தெருவில் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்றையும், வாலிபர் ஒருவர் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். அவரும் வெளிநாட்டு அலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவரால், பல லட்சம் ரூபாய் தொலைத்தொடர்பு துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரிடம் அந்த வாலிபர் கொடுத்து இருந்த ஆதார், அலைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு விசாரித்ததில் அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தோம். ''வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றித் தருவதன் மூலம் மர்ம நபர்கள் பெருமளவில் பணம் சம்பாதித்து இருக்கலாம். அல்லது, சட்ட விரோத கும்பலுக்கு உதவுவதற்காகவும் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது'' எனக் கூறிய காவல்துறையினர், இதுகுறித்து உள்ளூர் காவல்துறை மட்டுமின்றி கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரித்து வருவதாகக் கூறினர்.

 

கைப்பற்றப்பட்ட சிம் கார்டுகளைக் கொண்டு அவை யார் யார் பெயரில் வாங்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்குரிய இரண்டு வீடுகளிலும் தங்கியிருந்த நபர்கள் யார்? அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறதா? என அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.